ரஷ்யா, உக்ரைன் நாட்டவர்களை வெளியேற விடுத்த அறிவிப்பு தொடர்பில் விசாரணை

– உடன் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவையின் முன் அனுமதியின்றி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா கால நீடிப்புகளை இரத்துச் செய்ய இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமானதில் இருந்து, ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கும், நீண்ட சுற்றுலா வீசா நீட்டிப்புகளை இலங்கை அரசாங்கம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசாங்கம் மேலும் இந்த வீசா நீடிப்புகளை வழங்காது எனவும், 14 நாடகள் காலக்கெடுவுடன், மார்ச் 07 ஆம் திகதி அதனை நிறைவுக்கு கொண்டு வருவதாக, குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்யா, உக்ரைன் நாட்டவர்களை வெளியேற விடுத்த அறிவிப்பு தொடர்பில் விசாரணை appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்